Tuesday, December 13, 2011

தமிழ் மணக்கும் என் முத்தமிழ் மன்றமிது

கிளிஞ்சல்களின் சப்தங்கள் சங்கமித்த
என் கடற்கரையிது

குயில்களின் கிதங்கள் பரவிய
என் வனமிது

மணிகளின் ஓசைகள் நிரைந்த
என் கோயிலிது

கரவொலிகள் முழங்கிய
என் நகைச்சுவை கூடமிது

அறிவுரைகள் பகிரும்
என் முதிர்ந்த பள்ளியிது.

இரவுகளை ஒளிர்க்க செய்யும்
என் நட்சத்திர கூட்டமிது

வண்டுகளின் ரீங்காரங்கள் கரைந்த
என் பூந்தோட்டமிது

நெல் மணிகள் சிதரிய
என் வீட்டு களஞ்சியமிது

மழை கூட்டங்கள் சூழ்ந்த
என் கருநீல வானமிது

இதை விடுத்து வெருமைக்கு
நான் சென்றால் அங்கும்
ஏங்கி நிற்கும்
என் பாலைவனத்து மெளனமிது.

Friday, December 9, 2011

வேலை வாய்ப்பு




அங்கு கிட்ட்த்தட்ட 20 முதல் 25 பேர் வரை அமர்ந்திருந்தனர். நிகிலுக்கு தன்னையறியாமல் அரும்பரும்பாய் வியர்வை கொட்டத்துவங்கியது. அதை கைக்குட்டையில் துடைப்பதும் அதை யாராவது பார்த்துவிட போகிறார்களே என கூச்சம் கொள்வதுமாக சங்கடத்துடன் முதன் முதலில் பள்ளிக்கு செல்லும் சிறுவனின் மனோ நிலையில் பதட்டத்துடன் அமர்ந்திருந்தான்.அந்த MNCயில் வேலை கிடைப்பதே அபூர்வம்.! கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று அருகில் உட்கார்ந்திருப்பவன் வேண்டுமென்றே அடுத்தவனிடம் பேசி கொண்டிருந்த்தை தற்செயலாக கவனிப்பது போல காட்டிக் கொண்டு அவர்களது பேச்சில் ஊன்றிக் கவனிக்கலானான். அவனும் நிகில் மற்றும் மற்ற சிலரின் கவனத்தையும் ஈர்த்த இருமாப்பில் மேலும் சில குண்டுகளை முடிந்த அளவு அவர்கள் தலையில் போடலானான்.

“இங்க ரெகமண்டேஷன் இருந்தா தான் வேலைக்கே சேர்த்துப்பாங்களாம் நான் (ஒரு பிரபலமான அரசியல்வாதியின் பெயரை சொல்லி) அவர்கிட்டேயிருந்து வாங்கிகிட்டுதான் உள்ளேயே நுழைந்தேன். ஏன் நீங்க யாரும் அப்படி செய்யலியா...?” என கேட்க அனைவரது முகமும் பேயரைந்த மாதிரியாயிற்று. அதுவும் நமது கதாநாயகன் நிகில் நிற்கும் இட‌த்திலிருந்து கீழே நழுவி பூமிக்கடியில் சென்றுவிட்ட்தை போல உணர்ந்தான். “ரெகமண்டேஷன்... ரெகமண்டேஷன்...” என்ற வார்த்தை மட்டும் அவன் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது. முதல் முறையாக நேர்முகத் தேர்வுக்கு வந்தவனுக்கு இப்படி ஒரு இடியா விழவேண்டும் என இருந்த்து. உடனே அம்மாவை மனது தேட,அம்மாவிற்கு ஃபோன் செய்தான் சிறிது நேரத்தில் கொஞ்சம் தைரியம் ஒட்டிக் கொள்ள திரும்பவும் தன் இட்த்திற்கு வந்து அமர்ந்தான்.

நேர்முகத்தேர்வு ஆரம்பமானது தன் முறைக்காக காத்துக் கொண்டிருந்தான், சிலர் சோகமாகவும்,ரெகமண்டேஷன் பார்ட்டியும் சந்தோஷத்துடன் திரும்பி வருவதை பாத்துக் கொண்டும் அமர்ந்திருந்தான். இவனது முறையும் வந்த‌து அழைப்பை ஏற்று புன்முறுவலுடன் உள்ளே வரலாமா என அனுமதி கேட்டபின் அறைக்குள் செல்ல, நான்கு பேர் அடங்கிய குழு ஒன்று இவன் சான்றிதழ் கோப்பை அவர்களிடம் கொடுத்த‌தும் ஒரு முறை சம்பிரதாயத்திற்கு பார்த்தவிட்டு கேள்விகளை கேட்க துவங்கினர்.

பின் கடைசியாக சிபாரிசு கடிதம் உள்ளதா என கேட்டனர். எங்கிருந்து தான் நிகிலிற்கு அப்படி ஒரு ஆவேசம் வந்தோ தெரியவில்லை உடனே ‘ஏன் சார், ரெகமண்டேஷன் லெட்டர் இல்லைனா இந்த வேலையை எனக்கு தரமாட்டீங்களா’ன கேட்க, அவர்கள் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். இவன் லெட்டர் கொண்டுவர கேட்கிறானா இல்லை நம்மை திட்ட ஆரம்பிக்கிறான என ஒருவருக்கும் புரியவில்லை .

நிகிலே தொடர்ந்தான், “ரெகமண்டேன் லெட்டர் இருக்கறவன் வேலைக்கு சேர்ந்தா என்ன ஆகும்னு தெரியுமா சார், முதல்ல உண்மையான‌ திறமையுள்ளவன் நிராகரிக்கப்படுவான், பின் இவன் வேலைக்கு சேர்ந்த‌தும் நம்ம சிபாரிசில வேலைக்கு சேர்ந்துட்டோம்னு திமிரா நெனச்சா உடனே அவன் தலையிலே குட்டு போடுறமாதிரி, ஏதாவது தப்பு கண்டுபிடிச்சு அவன ஓரம்கட்ட பார்ப்பாங்க. இல்லைனா, ரெகமண்டேஷன்ல சேர்ந்திருக்கோமேன்னு தன் பேரையும் ரெகமண்ட் செய்தவர் பேரையும் சேர்த்து காப்பாற்ற அதிகமா டென்ஷன், மன அழுத்தம் உண்டாகும். வேலைல தப்புபண்ண கூடாதுன்னு நெனச்சு நெனச்சே பெரிய தப்பா பண்ணுவான். உங்களால அவன வெளிய அனுப்பவும் முடியாது தொடர்ந்து வேலைல வச்சுக்கவும் முடியாது, ஏன் சார் இந்த மாதிரி டென்ஷனுக்கு நீங்க ஆளாகனும்.இதே சிபாரிசு இல்லாதவன்னா தன் முயற்சியில தன் திறமையால வேலைக்கு தெரிவு செய்யப்பட்டிருப்பான்.மேலும் அவன் திறமையை வளர்த்து கம்பனியையும் வளர்ப்பான். தேவையில்லாம நீங்களும் யாருக்கும் பயந்து திறமை குறைவானவர்களை வேலைக்கு வச்சுக்கவேண்டாம் என கூறி முடித்து மூச்சுவாங்கிக் கொண்டான்.

அவர்கள் நால்வரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். ”மிஸ்டர்.நிகில்,நீங்க நினைக்கற‌ மாதிரி இங்க நாங்க ரெகமண்டேஷன்ல வர்ற‌வங்கள மட்டும் தேர்ந்தெடுக்கலை. அவங்களை மாதிரி ஆட்களை ஸ்மூத்தா ஹேண்டில் செய்து வெளியே அனுப்பிட்டு உங்கள் மாதிரி உள்ளவங்களோட அப்ளிகேஷன தான் தேர்ந்தெடுக்க முடிவு செஞ்சிருக்கோம்.
எனிவே, உங்க தைரியமான பேச்சும், சிபாரிசு பெற்றவர் மேல உள்ள உங்களோட கண்ணோட்டமும் எங்களுக்கு பிடிச்சிருக்கு. அதனால உங்க அப்ளிகேஷன் தான் முதல்ல ஃபைனல் இண்டர்வியூவிற்கு அழைப்பதற்காக‌ வைக்க போறோம். அதில் தேர்வாக எங்கள் வாழ்த்துகள் என கூறவும், நிகிலிற்கு அப்போதும் பூமி நழுவியது சந்தோஷத்தில்.

Thursday, December 8, 2011

ஷேர் ஆட்டோ




பாஸ்கரன் அன்றும் பரபரப்பாக கிளம்பிவிட்டான். இப்போ போய் ஆட்டோ பிடித்தால் தான் சரியாக இருக்கும் இந்த டிராஃபிக் ஜாமில் மாட்டிக்கிட்டு 10 நிமிஷத்தில் போகவேண்டிய ஆபிஸ்க்கு 45 நிமிஷம் ஆகிறது. சரி இன்னும் எத்தனை நாள்னு பார்ப்போம். என எண்ணியவாரே வீட்டிலிருந்து கிளம்பிவிட்டான். அவசரமாக வந்தவன் பஸ் நிறுத்தத்திற்கு வந்த 3 ஆட்டோக்களையும் விட்டுவிட்டு அடுத்த ஆட்டோ...அடுத்த ஆட்டோ என பார்த்துகொண்டிருந்தான். அவனது நன்பன் ஷாம் பைக்கில் கிராஸ் செய்ய ஹாய் டா என கூறி மீண்டும் கர்மசிரத்தையாக அடுத்த ஆட்டோவை பார்வையுற்றான்.

ஷியமே அருகில் வந்து “ என்னடா இது அநியாயம், நானும் 10 நாளா பாக்கறேன் உன் வண்டிய என் கிட்ட கொடுத்துட்டு நீ ஷேர் அட்டோ பிடிச்சு ஆபிஸ் வர, இதில் சில நேரம் லேட் ஆகி மெனேஜரிடம் திட்டுவேற வாங்கற. போறும்டா இந்த கண்ட்றாவி வேலையெல்லாம். என் கூட இன்னைக்கு நீ வர. எனவும் பாஸ்கர் ஏதோ சொல்ல வாயேடுக்க, ஷியாம் “ஒன்னும் பேசாதே, வா போகலாம், எனவும் ஷேர் ஆட்டோவரவும் சரியாக இருந்த்து. அதை ஒரு நிமிடம் உற்று பார்த்ததும் ஷாயாமிற்கு பதிலேதும் சொல்லாமல் ஏற சென்றான்.

ஷேர் ஆட்டோவை ஒரு அலசு அலசினான் ஷியாம் ஒரு முருகர் படம், ஒரு ஆளின் புகைபடம் அதற்கு ஒரு மாலை. ஒரு வேளை பெண் யாரையாவது நினைத்து சுத்துகிறானோ எண்ணி வண்டியை நோட்டமிட்டான். வண்டியில் யாரும் இல்லை. சிறிது நேரம் நின்றுவிட்டு சென்றது அந்த ஷேர் ஆட்டோ. ஒன்றும் புரியாமல் விழித்துவிட்டு அவனும் பைக்கை கிளப்பினான்.

மதிய உணவு இடைவேளையில் பொறுக்கமுடியாமல் ஷியாமே பாஸ்கரிடம் சென்று கேட்டுவிட்டான். அதற்கு சிரித்துக்கொண்டே பாஸ்கர், “ தேவையில்லாம தப்பு தப்பா யோசிக்காதேடா, நான் ஒரு நல்ல எண்ணத்தோடதான் அந்த ஷேர் ஆட்டோவில் வருகிறேன்.
நான் ஒரு நாள் வண்டி சர்வீஸ் விட்டதால் ஷேர் ஆட்டோவில் வருவதாக ஆகிவிட்டது. அப்போது பார்த்து நிறைய ஆட்டோக்கள் வந்தனவே ஒழிய காலியாகவோ சிறிது இடத்துடனோகூட வரவில்லை. எல்லாவற்றிலும் கூட்டம் நிறம்பிவழிந்தது.
என்ன செய்ய ஆபிஸிற்கு டயம் ஆகிவிட்டதே என நினைத்துக்கொண்டிருந்த போதுதான் இந்த ஷேர் ஆட்டோ வந்து நின்றது அதுவும் காலியாக. என்ன ஆச்சர்யம் என சந்தோஷத்துடன் ஏறி அமர்ந்தேன்.

சிறிது நேரம் நின்று காத்திருந்த ஆட்டோவை டயம் ஆனதால் சீக்கிரம் போகச்சொல்லி கூறினேன். ”சரி தம்பி இப்போ கிளம்பிடறேன்”, என எனக்கு பதிலளித்தவர் திரும்பி என்னை பார்த்து முறுவலித்தார். எனக்கு ஆச்சர்யமாகவும் சிறிது அதிர்ச்சியாகவும் கூட இருந்தது. ஏனேன்றால் வண்டியை ஓட்டியவர் ஒரு மூதாட்டி. 60 வயதுக்கு மேல் மதிக்கத்தக்க ஒரு வயதான பாட்டி ஷேர் ஆட்டோ ஓட்டுகிறாரா என அதிர்ந்துதான் போனேன்.

நான் இறங்கும் வரை ஒருவர் கூட ஏறாமல் இந்த ஆட்டோவை தவிர்த்துவந்தனர். அவரிடன் வந்த்திற்கான காசை கொடுத்துவிட்டு அன்று ஆலுவலகம் வந்தடைந்தேன்.அன்று முழுவதும் அந்த பாட்டியின் நினைவு இருந்துகொண்ட்டே இருந்த்து எனக்கு. எனது பைக் வர மேலும் ஒரு நாள் ஆகலாம் என கூறினான் மெகானிக். சரியென அன்று மாலை திரும்பவும் ஷேர் ஆட்டோவிற்காக காத்திருக்கையில் ஏனோ அவரை பார்க்கவேண்டும் போல இருந்த்து. மற்ற வண்டிகளை வேண்டுமென்றேன் தவறவிட்டு இவருக்காக காத்திருந்தேன். அவரும் வந்தார் சிரித்த முகத்துடன் என்னை அடையாளம் கண்டு கொண்டு வரவேற்றார். நானும் முன் இருக்கையில் சென்று அமர்ந்து அவரிடம் மெல்ல பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன்.

“தம்பி, என் வயசு 63 ஆகுது, என் வீட்டுக்காரன் ஒரு ஆட்டோ டிரைவர், ஷேர் ஆட்டோவும் வாங்கி ஓட்டிகிட்டு இருந்தார். நாங்க இரண்டு பேரும் காதலித்து கல்யாணம் செஞ்சுகிட்டவங்க, நல்ல முறைல வாழ்ந்தோம். இப்போ ஒரு 6 மாசத்துக்கு முன்னாடி, ஹார்ட் அட்டாக்குல அவர் இறந்துட்டார். எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை, என்னோட பெண் காலேஜ் முடிக்க போறா.காசுக்கு என்ன பண்ணறதுன்னு தெரியாம இருக்கும் போதுதான், அவர் காதலோட சின்ன வயசுல ஆட்டோ ஓட்ட கத்துகொடுத்தார் லைசன்சும் வாங்கி நானும் ஆட்டோ ஓட்டினேன். அவருக்கு முடியாத சமயத்துல நான் தான் சவாரிக்கு போவேன். ஆனா இப்போ எனக்கு வயசு ஆயிடுச்சு என்னால ஓட்ட முடியாது ஏதாவது ஆக்ஸிடெண்ட் பண்ணிடுவேன்னு நினைச்சு யாரும் இதிலே ஏறமாட்டேங்கறாங்க தம்பி.

எனக்கும் ஆட்டோ ஓட்டி அனுபவம் இருக்குன்னு சொன்னாலும் எத்தனை பேர்க்கிட்ட என்னால சொல்லிகிட்டே இருக்கமுடியும் அதுவும் இங்க ஷேர் ஆட்டோன்னா ரொம்ப டிமாண்ட், சாதாரண ஆட்டோவில் போவதை தவிர்த்து இப்போ எல்லோரும் ஷேர் ஆட்டோல தான் போக விரும்பறாங்க. சரி இதை ஓட்டி காலத்தையும் ஓட்டிடலாம்னு வந்தா, இங்க ஷேர் ஆட்டோ சங்ககாரங்க ஏதோ இளைக்காரமா பார்க்கறாங்க. என்ன செய்ய தம்பி உன்ன மாதிரி உள்ள நல்லபுள்ளைங்கதான் எப்பவாச்சும் அவசரம், மத்த ஆட்டோவில் இடம் இல்லைனா ஏறுதுங்க. மத்தபடி என் மேல நம்பிக்கை வச்சு ஒருத்தரும் ஏற மாட்டேங்கறாங்க தம்பி”,என கூறும் போதே அந்த வயதான புதுமைப்பெண்ணின் கண்ணிலும் கண்ணீர் திரண்டது ஆற்றாமையால்.

“அதாண்ட நான் ஒவ்வோருநாளும் அவங்களுக்கு சின்ன உதவியா இருக்கட்டுமேன்னு அவங்க ஆட்டோவில போறேன். இப்போ இரண்டு ஸ்டாப் தள்ளி இரண்டு பொண்ணுங்க ஏற ஆரம்பிச்சுருக்காங்க. வரும்போது ஒரு பெரியவர், வருகிறார். அப்படியே கொஞ்சம் ஆட்கள் வர ஆரம்பிச்சாங்கன்னா. மத்தவங்களும் இவங்களை பார்த்து பார்த்து தைரியமா இந்த ஆட்டோவில வருவாங்க. அதுக்குத்தான் இந்த முயற்சி. இன்னும் 10, 15 நாள் தான்...என்னோட இந்த சின்ன சேவை எனக்கு மனநிறைவை தருதுடா”, என்ற பாஸ்கரிடம் நானும் வருகிறேன் என்பது போல் ”கோபால் இந்தா பைக் கீ, நானும் பாஸ்க்கரும் ஒன்னா ஷேர் ஆட்டோவில் வருவோம் ரூமுக்கு வந்து கொடு,என்றான் ஷியாம். புரியாத கோபால் தன் காதலியுடன் சவாரிக்காக சந்தோஷமாக ஏற்றுக்கொண்டான் இந்த கடமையை.

Wednesday, December 7, 2011

அறிமுகம்




உன் அறிமுகம் எனக்கு
தாய்மொழியாம் தமிழ்
மறைமுகமாய் வெளிப்பட்டது

என் எழுத்தின் உன் பிழைத்திருத்தங்கள்
பின்னிருந்து அக்கரை பேசியது எனக்காக.

உன் கோவ கேள்விகளில்
விடையும் ஒளிந்து சிரித்தது என்னை பார்த்து

செதுக்கிய சிற்பமாய் நானாக,
உளியின் கல்லாய் உருமாற,
என்னைவிட்டு கவலை கற்கள் அகலவைத்தாய்

தெளிந்த நீரோடையின் கூழாங்கற்களாய்
உவமேயம் அன்றி உவமானமாய்
நட்பில் தொடங்கி சகோதரத்தில் முடிந்த
உறவு பாலமாய் தொடர்ந்தாய்

காற்றாய் மாறி என் திசை காட்டினாய்
மேகத்துடன் மேகமாய் பயணித்து
மண்ணில் விழும் மழையாய் உருமாற்றினாய்

நிலவு பூசி முகம் காட்ட
சூரியனுக்கு ஒர் இரவு
என் துயர் இருளில்
நீ நிலவு கதிர்வீச்சு

உயிர்த்தோழமையே
உலகிற்கு தெரியா உண்மையிது
நீ என் அடுத்த அம்மாவென்று.

Friday, December 2, 2011

சக்கரகட்டி





"நிரஞ்சனா.... நான் ஆபிஸ்க்கு கிளம்பறேன். நீ இன்னைக்கு லீவ் தானே...? நீயே போய் நான் சொன்ன லிஸ்ட்ல உள்ள சாமானை மட்டும் வாங்கிண்டு வந்துடு...சரியா...? எனக்கு இன்னைக்கு வர லேட் ஆகும்." என அவசரமாக ஷூ மாட்டிக் கொண்டே பேசும் கணவனுக்கு தஞ்சாவூர் பொம்மையாக தலையை ஆட்டி பதில் சொல்லிக் கொண்டிருந்த நிரஞ்சனாவின காதில் பக்கத்து வீட்டு மலர்கொடியின் குரல் வாசலைத் திரும்பிப் பார்க்கவைத்தது.

இடுப்பில் குழந்தையும் கையில் சிறிய கிண்ணமுமாய் நின்று கொண்டிருந்த மலர்கொடி, "நீரூ... கொஞ்சம் சக்கரை இருந்தா தாயேன் குழந்தைக்கு பால் கரைக்கனும்" என கேட்க, நிரஞ்சனா
" என்ன அக்கா நீங்க இப்படி கேட்கறீங்க, கிண்ணத்தைதாங்ககா...." என வாங்கி கொண்டே, பாருங்க இப்பத்தான் சக்க்ரை தீந்து போகப்போக்குது அவசரத்துக்கு கொஞ்சம் தான் இருக்குனு இவரை வாங்கிகிட்டு வர சொன்னா, இவர் என்ன வாங்கிகிட்டு வர சொல்லிட்டார். இத மாதிரி நிறைய காரணங்களால் அடிக்கடி தீருது ஒரு 2 கிலோவா வாங்கி போடுங்க சொன்னா கேக்கராரா இவரு...இருங்க அக்கா இருக்கற‌ சக்கரைல கொஞ்சம் தரேன் என நீட்டிமுழ‌க்கி பேசி ஏன் கேட்டோம் என் மலருக்கு தோன்றவைத்துவிட்டு உள் சென்றாள்.

உள்ளே அவளுடன் வந்து கிண்ணத்தில் சிறிதளவே கொடுப்பதைப் பார்க்கையில் முகம் மாறியது அவள் கணவன் திவாகருக்கு. "ஏன் டப்பா நிரைய சக்கரை வைச்சுகிட்டு இவ்வளவு கம்மியா தரே அவங்களுக்கு" என கேட்டவனை,"உங்களுக்கு ஒன்னும் தெரியாது, போதும் எல்லாம் இவங்களுக்கு." என கூறி வாயடைத்துவிட்டாள்.

சிறிது நேரத்தில் திவாகர் அலுவலகம் சென்றது அர‌க்கப் பற‌க்க மலர்கொடியின் வீட்டு சமையலறை ஜன்னலில் வந்து மலரை கூப்பிட்டாள்.

மலர்கொடிக்கு ஒரே ஆச்சர்யம்...ஒரு டப்பா நிரைய சக்கரையை போட்டு கொண்டு வந்து அந்த ஜன்னலில் வழியே கொடுத்துக் கொண்டே, “என்ன அக்கா நீங்க...அவர் முன்னாடி கேட்கறீங்களே, அவரை பற்றி உங்களுக்கு தெரியாதா சரியான கஞ்சனாச்சே, இன்னைக்கு கூடவே வந்து எவ்வளவு கொடுக்கறேனு பார்க்க வேற செய்தார். அதான் அவர் ஆபிஸ் போனதும் கொண்டுவந்தேன் என கூறி கையில் தவழும் குழந்தையை எட்டி கொஞ்சி “இந்த சக்கரகட்டிக்கு இல்லாத சக்கரயா என்ன...?” என கேட்டுவிட்டு செல்லும் நிரஞ்சனாவை ஆச்சர்யம் விலகாமல் பார்த்துக் கொண்டே நின்றாள் மலர்கொடி.

Tuesday, November 15, 2011

பொய் முகம்




பொய்யும் புரட்டும் முகத்தில் தாண்டவமாடி
பொய்யென உரைக்கும் மெய்யாய்.

வெளிப்பட்ட வேஷம் துவேஷமாய் மாற‌
உரைந்து நிற்கும் உண்மையும்

இரக்க குணம் அர‌க்க குணமாய்
நெஞ்சை பிளந்து வெடிக்கும் நாற்புறமும்

காலம் முழுதும் கசையடியாய்
கன‌வுகள் தொலைத்த க‌ருவறையாய்
மீந்து கிட‌க்கும்

எதை கொண்டு அதை அழிக்க‌
எதை கொண்டு நான் விழிக்க‌
என‌ கெஞ்சி கேட்கும் ம‌னித‌மும்.

நீரூற்றி நெருப்பூற்றி
நெடுங்கால‌ நினைவூற்றி
துவேஷ‌ம் வ‌ள‌ர்ந்து நிற்கும் வேளையிலே
உண்மை உறுத்த‌லாய் உள்ம‌ன‌தை உடைக்கும்

திருந்திட திண்டாடும் ம‌ன‌தின் மூலையில்
பொய் முக‌ம் அழிய‌த்துவ‌ங்கும்.

நல்ல‌தொரு ஆர‌ம்ப‌ம்
நாள் முடிவில் துவ‌ங்கும்.

மாற்ற‌ இய‌லாத‌ ம‌ன‌தினை
மாற்றிவிட்ட‌ பெருமித‌த்தோடு
கால‌ம் க‌டைசி நிமிட‌ங்களை க‌ட‌க்கும்...

Monday, November 14, 2011

அழைப்பிதழ் வேண்டுகோள்....!




மணமக்கள் தங்கள் திருமணத்திற்கு அழைக்கும் வரவேற்பு மடல்

எங்கள் மணவாழ்க்கையில் மணம் நிறைந்திட‌
ம‌ண‌த்துக்கொண்டிருக்கும் பூக்களே வாரீர்

எங்கள் வாழ்க்கைச் சக்கரம் நில்லாதோட‌
அச்சாணியாகிய‌ சொந்த‌ங்க‌ளே வாரீர்

நில‌ம‌க‌ளும் இட‌ம் த‌ர, ம‌லை ம‌க‌ளும் துணைவ‌ர‌
க‌லைம‌க‌ளும் கை கோர்க்க‌ வாழ்த்திட‌ வாரீர்

இனிய‌ த‌மிழில் இல்லற‌ம் ஆர‌ம்பிக்க‌
இந்த‌ இனிய‌ நாளில் வாழ்த்துப்பாட வாரீர்.

நீங்கா மணங்கொண்டு மாறா நற்குணங்ககொண்டும்
நிலைத்த‌தொரு வாழ்வைப் பெற வாழ்த்திட வாரீர்...!

Friday, November 11, 2011

தொலைதூர‌ ப‌ய‌ண‌ம்




எனைவிட்டு நானே தூரச் சென்று கொண்டிருக்கின்றேன்
தொலைதூரப் பயணம்
உன்னைத் தேடி
உன் நினைவுக‌ளுட‌ன்.

க‌ருமேக‌ இருட்டில் உன் பாத‌ச்சுவ‌டு,
ம‌ழையில் நனையாம‌ல்
என் குடை பாதுகாப்பில் ப‌த்திர‌மாய்.

என்னை க‌டைந்தெடுக்கும் உன் நினைவுகளிலிருந்து
என்னை நானே விடுவிக்க‌ முடியாம‌ல்
அத‌னுள்ளேயே சுற்றிச் சுழ‌ல்கிறேன்.

க‌டையக் க‌டையத் திர‌ண்ட‌தென்ன‌வோ
க‌ச‌ந்த‌ நிஜ‌ங்க‌ளே.....

நீண்ட‌ வழித் தேட‌லில் கிடைத்த‌து
க‌ண‌க்கெடுக்க‌ப்ப‌டாத‌ என் வ‌லிக‌ள் ம‌ட்டுமே.

க‌ளைத்து நிற்கும் நேரம் கூட‌
க‌சைய‌டி கொடுக்கும் உன் ஏளனப் புன்னகை.

மீண்டும் என் பயணம் உன் பாதையில்
அதே புன்ன‌கையை
அன்பில் முடிக்க‌ எண்ணி.....!

திருமணம்




கணவன்

ஆறாடி உயரத்தில் உலவும்

அழகிய‌ சுவர்.

பெயற்க முடியாமல்

அதில் ஒர் கல்லாய் மனைவி.

சிறுவனின் தூண்டில்


நிறைவேறியது

நீண்டநாள் ஆசை.

மீன் குஞ்சுவின் முதல் நீந்தலில்.

Thursday, November 10, 2011

மனப் புழுக்கம்




உன் மனபுழுக்கத்ததை மறைத்துவைத்த
புயல்களை நேசிக்க முயன்று

மறைந்த துகள்களுக்குள்
மண்டியிட்டு நான் அமர்ந்தேன்.

அப்போதும் மலர்ந்த பூவுக்குளிருப்பதாய்
நான் உணர்ந்தேன்.

கண்களுக்கு வேலி போட்டு
நினைவுகளை கட்டவிழ்த்தாய்.

நெருப்பிலும் உன்னுடன் வர‌
மறுப்பில்லை எனக்கு.

என் ஜென்மம் போனாலும்
உனை தொட‌ர‌ என் நிழ‌ல் போதும்.

எட்டிக்காயோ என
எட்டி நின்ற காலத்திலும்

மனதின் ஓரத்தில்
முட்களுடன் நீ வளர்ந்தாய்

பூ பூக்கும் காலம் வரை
வாடாமல் உனை காக்க‌

உன்னுடன் மலர நினைத்து
நிழலாகவே பின் தொடர்ந்தேன்.

என்றேனும் என் மன புழுக்கத்தையும்
நீ அறிவாய் என.

Saturday, October 29, 2011

சாலையொர பூக்கள்
















காலச் சுமை போல் பலரது
காலடி சுவடு உன் மீது.

வெய்யிலும், மழையும் இவ்வாறா
உன்னை ஆதரிக்க வேண்டும்...?

பெற்றவள் மடியில் ஏற்கவில்லை
பாரமெனகருதி மண்ணில் உதிர்த்துவிட்டாள்

இயற்கையாய் உன் வாசம்
உயிரிழக்கும் முன்,
வண்ணங்கள் தோய்ந்த உன் உடல்
வலுவிழக்கும் முன்,
எந்த செலவுமின்றி புதைக்கப்பட்டாய்

உற்றார் உறவினர்களாய் காரியம்
செய்த வாகங்களும்
மற்றபிற பயில்வான்களும்
நன்றி தெரிவித்துவிடு

நல்லவேளை உங்களில் ஒருவனாய்
பாவக்கணக்கில் மிதிபடாமல்
இருந்தேன் என்று....

Monday, October 24, 2011

விண்மீன்



மத்தாப்பு சிதறலாய் மனது

சிதறிய துகள்கள்

காணாமல் போனாலும்

தூரத்தில் தெரியும் சிலநொடி சந்தோஷம்.

இருட்டு தேசத்தில் ஒளிமுத்துக்கள்

பார்வை அற்றவனுக்கு

சிலநொடிப்போழுது மட்டும்

பார்வை கிடைத்த மகிழ்ச்சி போல்,

நிழல் என்று தெரிந்தும்

நிஜமாய் உணர்க்கிறேன்

வானத்தில் நிலைக்கும் விண்மீனாய்

மாற கோருகிறேன்.

விதவை திருமணம்















சிதையில் சிக்காத வெள்ளைபுறா

சிக்கிக் கொண்டது

சில்லரைக் கூண்டுக்குள்

விட்டில் பூச்சியின் வாழ்க்கை

வெளிச்சத்தின் அருகில்

சென்றாலும் விடிவதில்லை.

விடாமுயற்சியில் செல்கிறது வாழ்க்கை

விட்டில் பூச்சியின் வடிவில்.

தேடல்


கவனச் சிதறல்களை ஒன்று சேர்த்தால்

தெரியும் இதயத்தில் சிதறிக்கிடக்கும்

உன் ஞாபக பிம்பம்.

உன் நினைவு ச்சிவுகள்

கசையடியாய் என் நிஜத்தில்

கழன்று சென்ற காற்றடியாகிவிட்டய்

என் வானில் இன்னும் தேடுகிறேன்.

கவிதை எனக்கு...!




கவிதை எனக்கு பரிசு

உன்னால் பாராட்டப்படுவதால்

கவிதை எனக்கு சங்கீதம்

உன்னால் படிக்கப்படுவதால்

கவிதை எனக்கு உயிர்

கருவாக நீ இருப்பதால்

கவிதை எனக்கு சுவாசம்

தென்றலாய் நீ தழுவுவதால்

கவிதை எனக்கு விழி

உலகமாய் நீ சுழல்வதால்

கவிதை எனக்கு மரணம்

கல்லரையாய் நீ இருப்பதென்றால்...

Wednesday, October 19, 2011

மலட்டுத்தாயின் மகவு




சேற்றுச் செந்தாமரை நீ

இறைவனின் இரக்கம் நீ

நிலவின் நிழலாய்

கனவின் கருவாய்

என் இதய வாசலில் கால் பதித்தாய்

பாலைவனத்திலும் வானவில்லின்

எட்டாவது வர்ணமாய்

நீ தவழும் அழகைப் பார்த்திருப்பேன்

என் தலை சாயும் வரை உடன்வா...

வாழ்ந்து தான் பார்போம்.

வாழ்க்கையின் எதிரெதிர் துருவங்கள்

சேரும் போது சுபமாகட்டும் இங்கே...!

பரிசுப் பொருள்:


நீ சேர்க்க முடியாவிட்டால் என்ன..?
நான் சேர்க்க முயல்கிறேன்.
உன்னை நினைத்து
காதலில் கரையும் நிமிடங்களை...

சில வேளைகளில் குதுகலிக்கவே
நேரம் சரியாக இருந்தது.
சில வேளைகளில் கோபப்படவே
நேரம் சரியாக இருந்தது.
எவ்வேளையில் உன்னை நெருங்குவது
புரியாமல் போனது எனக்கு.

பாசத்தைக் கொட்டும் நேரத்தில்
இரக்கம் காட்டினாய்.
இரக்கம் கொள்ளும் நேரத்தில்
வெருப்பைக் கொட்டினாய்.

மாற்றம் என்பது மாறாதது என்றாலும்
உன் மாற்றம் மனதை
கிழித்த வேதனை வேர்களின்
வேளைகள் அதிகம்.

அது மரமாய் வளர்ந்து
உனக்கே பூஞ்சொரியும் நந்தவனமாய்
மாறிய விந்தை வேளைகளும் அதிகம்.

காத்திருப்புக்கு கணக்கீடுகள் இருக்கலாம்
காதலோடு வாழும் மனதுக்கு
வேளைகள் வழி சொல்லாது.

உன்னால் நான் சேமித்த் நிமிடங்கள்
அனைத்தும் என் இதய அறையில்
பரிசுப் பொருட்களாய் காத்திருக்கும்
எவ்வேளையும் உனக்காக.

Tuesday, October 18, 2011

குறுங்கவிதை...

11. விரல்களின் வலுகட்டாய‌
சந்திப்பில் எழுத்துக்கள்
என் கற்பனைக்கு தீனிபோடுகிறேன்
இரையாய் என் வாழ்க்கை.


குறுங்கவிதை...

9. கடைசியில் சம்மதித்துவிட்டாள்
காதலிக்க அல்ல.
அவள் கல்யாண பந்தலில்
முன்நின்று அட்சதை தூவ.

10. ' மாமா, மச்சான் எப்படிடா இருக்க...?'
கூவும் குரல்கள்
உறவுகளில் நட்பை காணாமல்
நட்பில் உறவுகளை தேடுகின்றனர்.

குறுங்கவிதை...

7. காலம் என்னும் சூரிய கதிர்களால்
உன் நினைவு என்னும் பனித்துளி
மறைந்துவிட்டது. ஆம் என் நாட்களில்
நீ தொலைந்த நிமிடங்களானாய்.

8. ம‌ழை:
ம‌ர‌யிலைக‌ளில் முத்துக்க‌ள்.
ம‌ழைத்துளின் ச‌ர‌ணால‌ய‌ம்.
ம‌ர‌ண‌ வாச‌லில் உயிர் த‌ண்ணீர் பெற்றேன்.
க‌ரிச‌ல் காட்டில் ம‌ழைத்துளி.

குறுங்கவிதை...

5. என் வாழ்க்கை கேள்விக்குறியாக‌
இருக்கும் போது அதை தாங்கி
நிற்கும் புள்ளியாக‌ நிற்கிறாயே...?

6. நீ ம‌ட்டும் தான் க‌விதையை
ரசிப்பவனா. நானும் ரசிப்பேன்
கவிதை நீயாக இருந்தால்.

குறுங்கவிதை...

3.முடிவான‌ ஒன்றை
முறிய‌டிக்க‌ முய‌லும்
முற்றுப் புள்ளி நான்.


4. நீ ஏறும் ஒவ்வொரு ப‌டிக‌ளிலும்
கைப்பிடிச் சுவ‌ரை ந‌ம்பாதே
உன் கால்க‌ளை ந‌ம்பு.

குறுங்கவிதை...

1. க‌ண‌வுக‌ள் ப‌லிப்ப‌தில்லை ஆனால்
காண்கிற‌வ‌ர்க‌ள் ச‌லிப்ப‌தில்லை.

2. ம‌ர‌ண‌ம்:
நிம்ம‌தியை தேடி ஒரு ஜீவ‌ன்
நிர‌ந்த‌ர‌ நித்திரையில்.
இதோ உன் நித்திரைக்கு
என் ஆழ்ந்த‌ மொள‌ன‌ங்க‌ள்.

பொறுமைக்குள் சிக்கும் சினம்

குடையை கிழிக்கும் மழையாய்
என் சினத்தின் கணம்
தாங்காமல் உன் மனதை கிழிக்கிறது.

பொறுமை போத‌னை செய்யும் புத்தக‌ம்
என் சின‌ம் என்னும் புழுதிப் புய‌லுக்குள் சிக்கிக் கொண்ட‌து.

வழிவ‌ழியாய் வ‌ந்த‌ பழ‌மொழிக‌ளும்
ப‌ழியாய் புதைந்து போன‌து.

சீறும் பாம்பாய் சின‌ம் த‌லைதூக்க‌
சிறகொடிக்க‌ப்ப‌ட்ட‌ கிளியாய்
துள்ளும் உன் ம‌னம்.

உருகி உருகி வ‌ழியும் நெருப்புக் குழ‌ம்பாய்
என் நாக்கில் உருண்டோடி வ‌ரும் வார்த்தைக‌ள்
உன் உதிர‌ம் உறையும் வ‌ரை கொட்டிய‌து.

உண்மையை உண‌ர்ந்தும் உண‌ரா ஜ‌ட‌மாய்
நீ த‌ந்த‌ அன்பு சொற்க‌ளை
வ‌லியாக‌ நான் திருப்பித்த‌ர‌,
நிக‌ழும் நிக‌ழ்கால‌ம் இற‌ந்த‌கால‌மாகிய‌து.

ச‌வ‌மாய் வாழும் பொழுதுதான்
உயிர் பெற்ற‌ பொறுமைக்குள்
சிக்கிய‌ சின‌ம் சித‌றிப்போன‌து.

நட்பின் வருகை

என் வாசல் கிளிஞ்சல்களின் சத்தம்

உன் வருகையை வரவேற்று

கடனுக்குக் கூட கண்ணீர் மிச்சமின்றி போனது

உன் பூமுகத்தை பார்த்து

வசந்தகாலம் வாசல் வந்தது

புன்னகை பூத்து

என்னுள் நுழைந்துவிட்டாய் இதயம் துடிக்கும்

இனி உனக்கும் சேர்த்து

வா காலம் முழுவதும் கை கோர்ப்போம்

காலனையும் விலைக்கு கேட்போம் சேர்ந்து.

என் வாழ்க்கை வாக்கியங்கள்..!

அம்மா..! என் முத‌ல் வாக்கிய‌மாய் முழு வாக்கிய‌மாய்...!

உன்னால் நான் க‌ண்ட‌ இர‌ண்டாம் வாக்கிய‌மாய்

க‌ல‌ங்க‌ரை விள‌க்காய் என் வாழ்க்கைக்கு அடைக‌ல‌மாய் அப்பா..!

உற்ற‌ உற‌வாய் உண‌ர்வாய், உட‌ன்பிற‌ந்த‌வ‌ள் என்னும்

உன்னால் நான் கொண்ட‌ ம‌ற்றோரு வாக்கிய‌ம்...!

ம‌கிழ்ச்சியையும் சோக‌த்தையும் ஒன்றாய் கொட்டிக் கொண்டாட‌

ந‌ண்ப‌ர்க‌ள் என்னும் திருவாக்கிய‌ம்....!

உட‌ன்பிற‌ந்த‌வ‌ளின் இன்னோருர் உயிராய்

என்னை நோக்கி பிஞ்சு கை நீட்டும்

ஒர் இனிய‌ வாக்கிய‌ம்...!

என் ம‌ன்ற‌ம் வ‌ந்த‌ ம‌ழைக் காற்றாய்

என்னை எப்போழுதும் த‌ழுவிச் செல்லும் என்றும்இத‌மாய்

முத்த‌மிழ் ம‌ன்ற‌ம் என்னும் பெரும் வாக்கிய‌ம்...!

வாழ்க்கை மாற்றம்


நேற்று இந்த மாற்றம் ஏற்படவில்லை

சட்டென்று இன்று மட்டும் ஏனோ...?

வாழ்வை திருப்பிப்போட கணநேரமே போதுமானதா...?

நாடகத்திற்கு கூட ஒத்திகையுண்டு

வாழ்க்கை ஓட்டத்திற்கு மட்டும் ஏன் இல்லை...?

திருத்தப்படாமல்விட்ட பிழைகளுக்கு

திருந்திய மனிதர்கள்கூட பிழைத்திருத்தர்கள் ஆக முடியாது.

கட்டாய வாழ்க்கையில் காதல் தொலைந்து போனது

காதல் வாழ்க்கையில் கட்டாயம் தொலைந்து போகிறது.

பிறர் வாழ்க்கையை திரிக்கத் தெரிந்தவர்களே வாழ்வதானால்

இங்கு வாழ்க்கையை தொலைத்தவர்கள் கடைசிவரை

தேடித் தேடியே வாழ்வை முடிக்கின்றனர்.

பலரது வாழ்க்கையில் மாற்றம் நிரந்தரப் புள்ளியாய்

முடியாமல் தொடர்கிறது.....

சுமை



நாட்காட்டியை போல் நாட்களை தாங்குகிறேன்

நாட்களை சுமக்கும் நாட்காட்டிக்கு வலிக்கவில்லை

ஏனோ எனக்கு வலிக்கிறது அதனை கடந்து செல்ல.

மாதங்கள் அனைத்தும் நாட்களை சுமப்பது போல்

என் எண்ணங்கள் அனைத்தும் உன்னை சுமக்கின்றனவே.

நீரில் முழ்கிய நிமிடங்களையும்

நெருப்பில் வெந்த நிமிடங்களையும்

கொடுத்த நாட்களைப் பார்த்த பின்புதான் தெரிந்தது

இவையெல்லாம் நான் சுமந்தது வெற்றுச் சுமை என்று.

எரிந்துபோன என் நிமிடங்களின் சாம்பலைக்கூட

சுமக்கவில்லை காலம்

என் முடிவோடு கொண்டு போனது காற்றாக....

முதிர்கன்னி






















ஒற்றை ம‌ர‌மாய் வாழ்க்கை

உன் நினைவு என்னும் காற்றில்

ஊஞ்ச‌லாட்ட‌ம் போடுகிற‌து.

சிட்டுக் குருவிக‌ளின் சிறையில் இருந்தாலும்

அத‌னுட‌ன் சிற‌க‌டித்து செல்ல‌ வாய்பில்லை.

என் நிழ‌ல் க‌ற்றைக‌ளின் ந‌டுவே

இளைப்பாறும் மான் கூட்ட‌த்தில்

குதித்தோடி சென்று சுதந்திர‌ம்

சுவாசிக்க‌ வ‌ழியில்லை.

என்னை சுற்றியிருக்கும் ஈர‌த்தை எல்லாம்

வேர்க‌ளின் வ‌ழியே உறிஞ்சிவிடினும்

ப‌ழ‌ங்க‌ளை ப‌ரிச‌ளிக்க‌ விழைகிறேன் எப்போழுதும்.

ப‌ழுத்த ம‌ரம் தான் க‌ல்ல‌டிப‌டும் என்ற‌

ப‌ழ‌மொழிக்குக்கூட‌ விதிவில‌க்கான‌வ‌ள்.

வ‌ருட‌ங்க‌ள் ம‌ட்டும் வ‌ழிவிட

வ‌ய‌தாகிப் போன‌வ‌ள்.

விழித்தெழு





















விழி எங்கும் வீண்கவலை வித்திட்ட
கண்ணீர் முத்துகளை
வசந்த மாலையாக்கு

உழைப்பால் உயிர் கொண்டு
உதிர்ந்த‌ உன் விய‌ர்வையை
சூரிய‌க் கதிர் கொண்டு
வைர‌க்க‌ல் சாலையாக்கு

க‌ன்னிய‌மாய் க‌ரைபுர‌ண்டோடும்
உன் ர‌த்த‌த்தை க‌ரைப‌டிய‌விடாம‌ல்
க‌ல‌ங்க‌ரை விள‌க்காக்கு.

உன்னில் நீயே உருவாக்கிக்கொள்ள‌ முடியும்
உயர்ந்த‌ ம‌னித‌னை

உதார‌ணத்தை உல‌கில் தேடாதே
உன்னில் தேடு.

ஒர் ஏழையின் குரல்






















நிறம் மாறும் நிமிடங்களின் நுழைவாயிலில்
சில ம‌னித‌ர்களின் நிஜ‌ங்கள்
நிழ‌லாகும் மர்ம‌ம் புரிய‌வில்லை.

க‌ட‌வுளின் நீதி எது...?
க‌ண்ணீரின் மீதி எது....?
எதுவும் ச‌ம‌ர்ப‌ண‌மாகும் ப‌ண‌த்திற்கு.

விலையில்லா வேண்டுகோளுக்கு
பூசாரிக்கூட‌ ச‌ம்ம‌திப்ப‌தில்லை.

க‌ண்ணாமூச்சி ஆடுவ‌து க‌ண்ண‌ன் அல்ல‌,
இங்கு ப‌ண‌த்தை பொதியாய் சும‌க்கும்
க‌ழுதைக‌ளின் கூட்ட‌ம் ம‌ட்டுமே...

இர‌ஞ்சுகிறேன் இனிய‌வை வேண்டுமென்று
வ‌ரைய‌றுக்கப்ப‌ட்ட‌ வாழ்க்கை என‌ அறியாம‌ல்.

நிவார‌ண‌ம் கோரி...கோரி...
நிச‌ப்த‌மான‌து நிமிட‌ங்க‌ள்

மொள‌ன‌த்திலும் மொழிக‌ள்
உண்டு என அறியாம‌ல்.

குளம்


நான் வற்றிப்போன குளமானது எப்போழுது...?

கல்லெறிந்தாய், தண்ணீர் மேலே வருமென்றா...?

வற்றிப்போக செய்துவிட்டு வயிற்றில் அடித்து என்ன பயன்...?

காய்ந்து கிடக்கும் என் நிலத்தில் சிறிய தவளையின் தேடல்

வழியை தேடியா....? விதியை தேடியா....?

என் மனசஞ்சலத்தின் வெளிப்பாடானது.

கட்டுண்டு கிடக்கும் கருவேலம்முள்ளும் என்னிடத்தில்,

எவரையும் காயப்படுத்த எண்ணாமல்.

க‌ற்க‌ண்டு சிரிப்பில் காகித‌ப்பூவும் என்னிட‌த்தில்

எவ‌ரையும் வ‌ர‌வேற்க‌ முடியாம‌ல்.

இவ்விர‌ண்டும் காலத்தின் அடியால் ம‌ரத்துக்கிட‌க்கும்

பாரங்க‌ற்க‌ளின் பாதுகாப்பில் எப்போழுதும் இணைபிரியாம‌ல்....

Monday, October 10, 2011

கிளை முறிந்த மரங்கள்




















இந்த கவிதை, கவிதைப் போட்டிக்காக தேசிய ஒருமைப்பாட்டை
அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.



கண்டம் கண்டமாய் பிரித்தாளும் கொள்கையில்

பிரிந்த்தது நம் தேசமும்.

கேட்டது கிடைத்தது...ஆள்பவர்களுக்கு

நம் கூக்குரல் புதைந்தது பிளவுகளின் பள்ளத்தில்..

தனி மரம் தோப்பானது சுதந்திரம் வேண்டி

மரங்களின் தூளியில் துயில் கொண்ட நேரம்..

கிளை முறிந்த மரங்களாய் வீழ்ந்துதான் போனோம் வெற்றிக்குப் பிறகும்

சுதந்திர மயக்கத்தில் கிளை முறிந்த மரங்களை விட

கிளைகளை முறித்த மரமாய் ஆனோம்.

காதல் கிடங்கு


மழை விழுந்த ஈரத்தை இழுத்துக் கொள்ளும்
மண் தரைப்போல என்னுள் விழுகின்ற உன் அன்பு
போதாமல் இழுத்துக் கொள்கிறேன்.

பூக்களின் வண்ணங்களில் வாசம் செய்கிறாய்
அதனால் தானா வண்ணங்களுக்கும் வாசம் பிறக்கிறது.
வெறும் காகிதப்பூவிலும் கசங்கிய வாசம்
நீ சோகம் மீட்டும் போழுது.

பிரபஞ்சத்தைவிட மர்மமானது உன் புன்னகை
அதில் சுடும் சூரியனும் அடங்கும்
குளிர் நிலவும் அடங்கும்
கோடி நட்சத்திரங்களாய்,
உன் மன சஞ்சலங்களும் மின்னும்.

உன்னை நோக்கி எழும்பி
எட்டிவிட‌ துடிக்கும் என் ஆசை
ஒரு நிலையில் அட‌ங்கினாலும்
உருண்டோடி தேடி முடிக்கும் என் காத‌லை.

நீ இருந்து சென்ற‌ இட‌த்தின் தூசியைக்கூட‌
கைப்ப‌ற்ற நினைக்கும் குப்பைத் தொட்டி ம‌ன‌து.
ஆம் நீ தூக்கி எரிந்த‌ ப‌ல‌வ‌ற்றில்
என் இத‌ய‌மும் ஒன்று
இப்பொழுது உன் நினைவுக‌ளை
சேக‌ரிக்கும் கிட‌ங்கான‌து.

சிறைப்ப‌ட்ட ஓவியம்....





















சாலையோர சிற்பங்கள் கூட
சுதந்திரம் அடைந்தவைதான்..

உன் வேலைப்பாடு நிறைந்த வேலியில்
என் உயிரோவியம்
வெறும் கண்ணாடிப் பதுமையாய்....

தாய்பாலுக்கு ஏங்கும் சிறு குழந்தையாய்
உன் ஒற்றைப் பார்வைக்கு காக்க வைத்தாய்.

பழையாதிகிவிட மாளிகையிலிருந்து
வெளியேற்றம் ‍‍‍‍_ உடைந்து விழுந்தாலும்
உற்சாகமாய் என் அதே புன்னகை
விடுதலையை நினைத்து......

விரிசல்...


நாளும் போராடுகிறேன்
என்னில் கலந்துவிட்ட உன் நினைவுகளுடன்
பழகிவிட்ட நினைவுகளை
பிரித்தெடுக்க முடியாமல் வலிக்கிறது இதயம்

வீட்டினுள் இருக்கும்
நிறைந்த குடத்திலிருந்து
ஒரு துளி நீரைக் கூட
பருக முடியாத காக்கையாய்
வெளியிருந்து தவிக்கிறது உள்ளம்

நிகழ்கால நிஜங்களும்
இறந்தகால நினைவுகளும்
போட்டியிட....
பட்டிமன்றமானது மனம்.

உன் இதய ஓரதில் எங்கேனும்
நான் இருந்தால்....
நான் உடலால் மரணித்த பிறகு
செப்பனிடு என் கல்லறையை

அதுவேனும் உன் இதயத்தைப் போல
விரிசல் விடாதிருக்கட்டும்......

Saturday, October 8, 2011

தனிமை


பாதையில் நடக்கவைக்கப்பட்டேன்
என் முன்னால் பூட்ஸின் ஓசை
‍சிறிது நேரத்தில், என் பின்னால்
தேய்ந்த செருப்பின் மேலும் ஒரு தேய்மானம்
இரண்டும் ஓய்ந்தது
தனியே என் பாதுகையின் பயணம்
மீண்டும் ஓசைகள் என் பக்கத்தில்
பைக்கின் பரவச ஓட்டம்,
என்‍‍‍‍‍‍‍ ஆகாயத்தை சற்றே கிழிக்க முயன்றவாறு
விமானத்தின் பிரம்மாண்ட வீரிடல்
அதுவும் ஓய்ந்தது ஒரு சில நிமிடங்களில்
மீண்டும் என் பாதுகையின்
பயணம். தனியாக... நிசப்தமாக...

தனிமை பிடித்தமானதாக இல்லை,
இப்பொழுது பழக்கமானது.

ஏக்கங்கள்


நிழலுருவின் நீண்ட பயணம்
ஏங்கித் தவிக்கும் மனங்களின் பிரதிபிம்பங்கள்

கை குழந்தையில் ஆரம்பித்து
கரையேற‌த் துடிக்கும் மனங்களிலும்
மிதமிஞ்சி மிதக்கும் ஏக்கங்கள்

கொம்பூன்றி தள்ளாடும் வயோதிகத்திலும்
நீங்காமல் நிமிர்ந்து நிற்கும் ஏக்கங்கள்

காலை முதல் மாலை வரை
கம்பிக்கு நடுவே வாழ்க்கையை எண்ணும் போதும்
கைதிக்குள் கரைந்து மிஞ்சும் ஏக்கங்கள்

கையேடின் பக்கம் நிரம்பி
மையெல்லாம் தீர்ந்த பின்னும்
தீராத முடிவாய் தொடரும் ஏக்கங்கள்

எண்ணச் சிதற‌ல்களில்
சிதறிக்கிடக்கும் சில்லுக்களில் சிரிக்கும் ஏக்கங்கள்

அடிக்க அடிக்க எழும்பும் பந்தாய்
மனதை முட்டி மோதும் ஏக்கங்கள்

சூரிய கதிரில் மலர்ந்தாலும்
நிலவொளியில் குளிர்ந்தாலும்
இறுகிய இருட்டிற்கு இழுத்துச் செல்லும் ஏக்கங்கள்

நியாயத்திற்கும் அநியாயத்திற்கும் நடுவே
நூல் அளவு இடைவெளியில்
கழைக்கூத்தாடியாக்கிவைக்கும் ஏக்கங்கள்

ஏக்கங்களின் முடிவு பக்கங்களை
தேடுகிறேன் ஏக்கமுடன்.....!

Saturday, October 1, 2011

மறந்து போனேன் மறுத்துத்தான் போனேன்....


மறந்து போனேன் மறுத்துத்தான் போனேன்....
உன்னை நினைக்க அல்ல
உன் நினைவுகளை....

பேச மறந்த வார்த்தைகளும்,
மறுத்த மொளன சாதிப்புகளும்
அவரவர் நியாயங்களை நிரப்ப முடியாமல் போனது அசந்தர்பமாக.

காலம் கடந்த ஞாயாபகமாய்
என் விழியோரத்தில் உன் நினைவுத்துளிகள்
கண்ணீராக.

என் வாசலில் உன்னை வரவேற்று
என்றோ போட்ட கோலம் இன்று சிரிக்கிறது
என்னை பார்த்து அலங்கோலமாக.

என் இதயத்தில் உன் நினைவுகள்
திரைசீலையின் நைந்த மடிப்புகளின்
கிழிசல்களாக.

கை நிரைத்த வளையல்கள்
கண்ணாடித்துண்டாய் கையை கிழிக்க,
மனம் நிறைந்த வாழ்கையில்
மனதை கிழித்தாய் எளிதாக.

இவையெல்லாம் உன் பிரிவில்
நான் வாழும் வாழ்கையின் உதாரணங்கள்
பிடிப்பில்லாமல் அல்ல பிணமாக.

Monday, September 26, 2011

உன்னை நோக்கி















வானை நோக்கி வளரும் மரம் போல‌
உன்னை நோக்கி என் பயணம்.

எய்தவனை விடுத்து,
இலக்கை நோக்கி செல்லும் அம்பைப்போல
காரணம் அறியா உன் காதலை நோக்கி என் பயணம்.

ஒற்றைக்காலில் தவம் செய்யும் கொக்கின் இரையாய்
உன்னைச் சுற்றி நீந்தும் என் பயணம்.

நீரைத்தேடி நிலத்தைப் பிளக்கும்
வேரின் தாகத்தைப்போல‌
உன்னைத் துர‌த்தும் என் ப‌ய‌ண‌ம்.

சிப்பியைஅடைந்து முத்தாகும்
தூய‌ ம‌ழை துளிபோல‌
உன்னை தேடி என் ப‌ய‌ண‌ம்.

ப‌ய‌ண‌ம் எனதானாலும் பாதை நீ சொன்ன‌து
ப‌ய‌ணிக்கிறேன். என் த‌னித்த‌ ப‌ய‌ண‌த்தின் முடிவு
உன்னிட‌ம் சேருமென‌...

வெளிச்சப்புள்ளி
















நினைத்த பொழுதே நனைத்த
துயரம் நீ
உன் உண்மைகள்
உன்னைவிட மோசம்
நிலைப்பதில்லை,
விரைவில் பொய்துவிடுகிறது
உன்னை போல.

காற்றலையாய் கலைந்த
நிகழ்வுகளை
தேடினாலும் காலம்
மீண்டும் தருவதில்லை

வாழ்ந்த நாட்களைவிட
உன்னை நினைத்து
கரைந்த நிமிடங்களே அதிகம்.

என் இருட்டில் வெளிச்சப் புள்ளியாய் நீ
புள்ளியாய் மட்டுமே...

வீடு....



ஓடு நனையாத வீட்டில் ஒட்டடைப் பூச்சிகள்
அடுப்பு எரியாவிட்டாலும்
அதன் கதகதப்பில் பூனை

சின்னஞ்சிறு ரயில் வண்டிகளின் உரசல்
என் காலடியில் மரவட்டையின் ரூபமாக
சிந்திய சக்கரைத் துகள்களைத்
தேடி அலையும் எறும்புக் கூட்டம் ‍
என் மனம் சட்டைப் பையில்
சில்லரைகளைத் தேடி
அலைவது போல....

அடி சோற்றுப் பானையில்
வயிறு நிரம்பினர் பித்ருக்கள்
வழி வழியாய் வந்தோர்க்கு
என்ன செய்தோம் என்று எண்ணி
சோர்ந்து விழுந்த என் நினைவுகளில்
ஓர் ஆனந்தம்....

ஆம் என் வீடும் ஒரு சரணாலயம் தான் என்று.

Saturday, September 24, 2011

உடன்பிறப்பவள்...உயிரின் மறுபிறப்பவள்....


என் உறவாய் மலர்ந்த
உடன்பிறப்பவள்
என் உயின்
மறுபிறப்பவள்....

மலரிதழில் மழைத்துளியாய்
என்னை மண்ணில்
விழாமல் காப்பவள்...

பூவாசம் முள்ளிற்கும்
ஒட்டிக்கொள்வதுண்டு
எனக்காக முள்ளாய்
சில நேரம் நீ
மாறியதுமுண்டு....

விழியோரம் வழிந்திடும்
கண்ணீரும் உன்னால்
அன்பின் மழையாய்,
மகிழ்ச்சியின் சாரலாய்
கரைந்த்துண்டு...

நீ நீர் பூத்த நெருப்பாய்
நிலைத்திருக்கிறாய்
உன் கதகதப்பில் என்றும்
நான் குளிர்காய்வதற்கு....

கைக்கெட்டிய தூரத்தில்
வானவில்
நாம் கைகோர்த்த நேரத்தில்
சிரிக்கும்....

இனியும் நினைவில் வைப்பதற்கு
நிறைய நிஜங்கள்
காத்திருக்கின்றன...
வாழ்நாள் போதாது
உன் நிழலாய் நான் தொடர்வதற்கு....

Wednesday, September 21, 2011

அம்மா...


இந்த கவிதையை எனது தாய்க்கு சமர்பிக்கிறேன். இது எனது தாய்க்கு மட்டும் அல்ல உலகிலுள்ள அனைத்துத் தாய்மார்களுக்கும் பொருந்தும். அதனால் இக்கவிதை அவர்கள் எல்லாருக்கும் எனது சிறிய காணிக்கை.

அம்மா...

ஒரு வாய் சோற்றுக்கு
ஏங்கி நின்ற காலம் இல்லை
உன் சோற்றுக் கவளங்களையும்
சேர்த்துத்தந்தாய்....

சிட்டாடை கட்ட ஆசையில்லை
பட்டுப்பூச்சியிடம் இரக்கம் காட்ட
கற்றுத்தந்தாய்....

சிறு வயதில் கால் நடை பழக்கமில்லை
குதிரை சவாரியைவிட
உன் இடுப்பு சவாரி சுகமானது....

தங்கவளையல் தரமிழந்து போனது
உன் கண்ணாடி வளையலிடம்
போட்டிப்போட்டு....

உன்னிடத்து என் அன்பை வெளியிட
இச்சொல்லே போதும்
"என் அம்மா"....

என்னுள் ஆறறிவைத்தாண்டி
ஏழாம் அறிவாய் சுழலும்
உன் பாசம்...

என் கண்ணீர் தகுதியானது
உன்னை நினைக்கும்
பொழுது மட்டுமே....

நான் பிறந்த நாளைக்
கொண்டாடுகிறேன்
நீ உயிர்தெழுந்த நாளுக்காக....

நிழலாக போகும் நிஜம் நீ.
ஆனால் முடியவில்லை...
தொடர்கிறது...
ஒவ்வொரு உயிரிடத்தும் தாயன்பு....