Monday, December 29, 2014

காய்ச்சல்

காய்ச்சலில் என் உடல்
தகித்துக் கொண்டிருந்த போது
குளிர்ந்த நீரில்
மூழ்க வைத்தாய்
உடல் சூட்டைக் குறைக்கவே
அவ்வாறு செய்தாய் என
சமாதானப் படுதிக் கொண்டேன்
மார்கழிப் பனி வெளியில் கொட்ட
ஜலதோஷம் என் நாசியில் கொட்ட
எனக்குப் பிடிக்கும் எனச் சொல்லி
பனிக்கூழ் ஊட்டிவிட்டாய்
அதை உன் அன்பு என்றே
எண்ணியிருந்தேன்
வயிற்றுவலியில் படுத்திருக்க
சமைக்க வேண்டாம் என
கரிசனம் காட்டி பரோட்டா குருமா வாங்கி வந்தாய்
என் மீதான அக்கரை என்றே
இருமாந்தேன்
தூங்க முடியவில்லை
நீ வருந்துவாயே என
தூங்குவது போல நடித்திருந்தேன்
நீ மிகச் சரியாகக் (!) கேட்டுவிட்டாய்
நான் காய்ச்சல் வந்தது போல்
நடிக்கிறேன் என
இரண்டாம் முறையும் என்னை
சிலுவையில் அறைய
துரு ஏறிய ஆணிகளை வைத்துக் கொண்டு
என்னை சுத்தியல் தேடச் சொல்கிறாய்
அதையும் உனக்காகவே தேடிக் கொண்டிருக்கிறேன்
உனைப்பற்றிய உன்மைகள்
உரைத்த போதும்
நான் நம்ப விரும்பவில்லை...
இதைப் படிக்காமலேயே
அடுத்த கேள்வியும் கேட்பாய்
கவிதை எழுத முடிந்த உனக்கு காய்ச்சலா? என்று
பி(ப)டிக்காத உனக்கு விளக்கம் சொல்லிப் பயனில்லை
கவிதை உடல் சார்ந்ததல்ல
மனம் சார்ந்த ஒன்று என்று ...