Monday, April 2, 2012

தோழி

சிறிய கட்டிடம் வீடுகளுக்கு நடுவே, பள்ளி என முகப்பில் பெயர் பலகை வைத்திருந்ததால் அடயாளம் சட்டென தெரிந்தது. மறுநாள் அங்கு தயக்கத்துடன் உள்ளே சென்றேன். இருவர் சிறியவயதே இருக்கும் நாற்காலியில் அமர்ந்திருந்தனர்.

“சார், புதுசா பள்ளி ஆரம்பிச்சிருக்கீங்க போலருக்கு. நான் இளநிலை ஆங்கிலம் செய்யறேன். ஹிந்தியும் படித்திருக்கிறேன். உங்க ஸ்கூலில் டீச்சர் வேலை காலியா இருக்கா?” என்றேன்.
இருவரில் சிறிது குள்ளமாக இருந்தவர் பேசினார். சரிங்க மேடம், உங்க பயோடேடா கொண்டு வந்திருக்கீங்களா.?” என்றவுடன் நீட்டினேன். சரி நாளை உங்களுக்கு கால் செய்கிறோம். என்றார்.
சந்தோஷத்துடன் வீடு திரும்பினேன். அடுத்த நாள் அழைப்பு வரவே எனது சர்ட்டிஃபிகேட்டுடன் சென்றேன். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு ”இது மே மாதம், நீங்க ஜூன் நான்காம் தேதி ஜாய்ன் பண்ணறீங்களா? என கேட்டனர். உடனே ஒப்புக்கொண்டேன். 3ஆம் வகுப்பு ஆசிரியராக நியமனமானேன். மாதம் 4000/- சம்பளம் முதல் சம்பள பணம் நிர்ணயிக்கப்பட்டது. மிக்க சந்தோஷத்துடன் வீடு வந்து சேர்ந்தேன்.

நாட்கள் நகர்ந்தன மெதுவாக ஆனாலும் எனது பரிட்சைகளுக்கு பங்கம் வராமல் மே மாதமே முடிந்து ஜூன் மாதம் தான் ஆசிரியர் பணிக்கு செல்வதால் மிக வசதியான உத்தியோகமாகபட்டது பல விதத்தில். ஜூன் 4ம் தேதி பரபரப்பாக இருந்தது பள்ளி. நான் சென்றது அந்த உயரமான சார் என்னை பார்த்து வாங்க வாங்க என்றார். உடனே அந்த குள்ளமான சார் வாங்க டீச்சர் உள்ள போய் ப்ரேயர் ஆரம்பிக்க போகுது போய் பசங்கள பாருங்க என உரிமையுடன் முதல் பணியை இட்டார்.

ப்ரேயர் செய்யும் இடமும் ஒரு 100 பேர் நிற்கும் இடமாக கச்சிதமாக இருந்தது. நிறைய பிள்ளைகளுடன் அவரவர் பெற்றோரும் நின்று கொண்டு அழும் பிள்ளைகளை சமாதம் செய்து கொண்டிருந்தனர். அதில் ஒருத்தி சுடிதாரில் மாநிறமாக ஒர் குழந்தையை சமாதனப்படுத்த முயற்சித்து தோற்றுக்கொண்டிருந்தாள். யாராக இருக்கும் என யோசித்து பின் சித்தி அத்தை உறவாக இருக்கும் என விட்டு சென்றேன் அவளையும் அவள் நினைவையும்.

ப்ரேயர் முடியவும் ஒவ்வொரு பெற்றோராக அழும் குழந்தைக்கு டாடா காட்டிவிட்டு மறைந்தனர். எனகான க்ளாஸ் ரூம் எது என கேட்க மாடியில் உள்ளது என உயர ஆசாமி சார் ரூமிக்கே உடன் வந்து விட்டுசென்றார். எல்லா பசங்களும் வரிசையில் மேலேயேறி வர, எனது மூன்றாம் வகுப்பு மாணாக்கர்களும் அவர்தம் இருக்கையில் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டனர்.
ஒர் மதில் சுவர் போல் தடுப்பு மட்டுமே உள்ள பக்கத்து க்ளாஸ் ரூமிலிருந்து ஒர் இளம்பெண் மாணவர்களை சத்தம் போடமல் இருக்கச் சொல்லி இரச்சும் குரல் கேட்க எனக்கு ஆர்வம் மேலிட்டது யாராக இருக்கும் ஃப்ரண்ட் ஆகிக்கலாம் என எண்ணி எட்டி பார்த்தேன். எனக்கு ஆச்சர்யமாக போய்விட்டது அந்த சுடிதார் பெண். ஆ..இவளா? இவ டீச்சரா? இப்படி இருந்தா எப்படி பசங்க பயப்படும் மரியாதை கொடுக்கும் என எண்ணினேன். அதற்கேற்றார் போல் அங்குள்ள பிள்ளைகள் ஒவ்வொருவராக அக்கா எனக்கு தண்ணி வேணும், அக்கா எனக்கு பாத்ரூம் போகனும் என கேட்க கடுப்பாகி போனாள் அவள். நானோ சிரித்துவிட்டேன் என் சிரிபொலி கேட்டவுடன் யாரது என்பது போல் என் பக்கம் திரும்பிப்பார்த்தாள்.

தொடரும்....

Wednesday, March 21, 2012

உரிமை-6

வளர்பிறை நாள்
எதையும் ஆரம்பிக்க
உகந்த நாளாம்.
சூரிய நிழலின் மேல் நம்பிக்கை
பூலோகத்தில்.
நிழலாடியது நிஜத்தை திருடிக்கொண்டு.

Thursday, March 8, 2012

இறப்பு




பிரிவு என்பது
நிலையாதிருப்பதன் மெளன மொழி.

நாம் கேட்கும் சக்தியிழந்த பின்
கிடைக்கும் பெரும் சப்தம்.

காலம் கடந்த காட்டு வழி ஞானம்.

நேசிப்பவரின் இறுதி சுவாசிப்பு.

நிலம் நீங்கி நிலத்தில் புதைத்தாலும்
உரிமை இழந்து உறவாடும் சவப்பெட்டி.

அவ்வழி சென்றோரின் வரிசையில் நாம்
தொலைந்து போனதை தேடிக்கொண்டு.

Tuesday, March 6, 2012

உரிமை 5

நெருங்கி அமர்ந்தன கிளிகள்
கூடோடு போயின
மரத்தின் வெட்டப்பட்ட கிளை
வீட்டு அலங்கார பொருளாக.

Tuesday, February 14, 2012

உரிமை 4

ஊர் கூட்டி 20 வருட
உரிமையை இழந்தேன்.
இதோ வெளி நிலத்திற்கு
சொந்தமாகி போனது
என் வீட்டு விதை.
மகளின் திருமணம்.

Wednesday, February 8, 2012

உரிமை 3

நட்பில் துரோகம் பழகிப்போனது
பழக்கவைக்கப்பட்டது உன்னால்
இப்போழுதெல்லாம் என் கண்களின் நீரை
சேமிக்க ஆரம்பிக்கிறேன்,
வரண்ட என் இதயத்தின்
நட்பு என்னும் தாகம் தீர்க்கும் என்று.

Monday, February 6, 2012

உரிமை! - 2

அழகிய வண்ணங்கள் சேர்த்த ஓவியமாய் கோலம்
தெருவடைத்து திமிர் பேசியது
தன்வீட்டு மார்கழி கொண்டாட்டத்தை.
வழி அறியோரின் மிதியால்
நசுங்கப்பட்டது சில உயிர்கள்