Thursday, April 12, 2012

உரிமை 7

சுகம் தரும் குளிர் போய்
இதம் தேடி நான்
போர்வையின் கதகதப்பில்...
மேலும் என் போன்றோரின்
தேவைக்காக உருவானது கம்பளிகள்
ஆட்டுத் தோலுரிப்பில்....

Wednesday, April 11, 2012

ஆசை

பறந்து பறந்து உலகை
ஒர் வலம். . . ஊர்வலம்.

சுதந்திர சாவி கிடைத்த சந்தோஷம்
எதன் மீதும் விறுப்புவெறுப்பில்லா நேசம்

ஒய்யாரமாய் பறந்து கையில் சிக்காமல்
எக்காளமிட்டு எட்டி செல்லும் வேகம்

நீண்டு பறந்து
நிலவு முட்ட ஆசை

நேரம்காலம் கடந்து
துள்ளலாய் பறக்கும்
நிற்காத வேலை

பனித்துளியிடம் ஒர் பதிவு
பணியாளனின் வியர்வையில்
ஒர் பதிவு

நிலத்திலும் ஒர் பதிவு
ஓடும் நீரிலும் ஒர் பதிவு

காற்றை கிழித்து பதிவிட
நூற்றுக்கணக்கில் முயற்சி

நீலவானம் தொட்டு
கதைகள் பேச நினைக்க
கார்மேகம் முட்டிற்று உன்னை

சிவ்வென்று பறந்து செல்லும்
காற்றாடியின் ஊடே
உன் சிறிய சிறகின் சாதனை

உன் பெயரில் வரும்
ஈகையை எடுத்துக்கொண்டேன்
தன் இச்சையை அனிச்சையாக தணிக்கை
செய்ய. . . .

ஆம் நானும் ஒர் ”ஈ” ஆக ஆசை.

Thursday, April 5, 2012

தோழி

5 மாதங்கள் ஓடிவிட்டன நானும் சுகன்யாவும்(சுடிதார் டீச்சர்) சிநேகமாகி அவள் மூலமே அனைத்தையும் அறிந்தேன். அவளுக்கு மட்டும் எப்படி அனைத்தும் தெரியும் என்றால் அந்த சின்ன சார் இவளது குடும்பத்தாருக்கு குடும்ப நண்பர். இவர்தான் ஸ்கூல் கரஸ்பாண்டண்ட் அப்பறம் அந்த நெட்டை பெரிய சார் பிரின்சிபல். கேட்டவுடன் சிரிப்புத்தான் வந்தது பிறகு அவர்களது முயற்சியும் நிர்வாகத்திறனும் கண்டு அசந்து போனேன். இந்த 5 மாதங்களின் மிகவும் கவர்ந்தவர் பெரிய சார் அவருக்கு நாங்க பெரிய தம்பி எனவும் இவரைவிட குள்ளமாக இருந்ததனால் சின்ன தம்பி எனவும் கோட்வேட் வைத்து கூப்பிட்டோம் எங்களுக்குள். பி.டி (பெரிய தம்பி) மனதில் குடிகொள்ள ஆரம்பித்தார் சிறிது சிறிதாக.

மாதங்கள் ஓடின அடுத்த மே மாதம் வரவும் எங்கள் வீட்டில் எல்லோரும் டூர் போவோம் என கேரளாவிற்கு சென்றோம். மிக ஆனந்தமான நாட்களாக கழிந்தன. எல்லா படங்களுடன் ஆசையாக எனது ஸ்கூல் மிஸ்களுக்கு காட்ட முக்கியமாக பி.டிக்கு காட்ட அவற்றை எப்படி எல்லாம் கமண்ட் அடித்து ரசிப்பார் என ஆவலாக ஊர் திரும்பும் நாளை எதிர்பார்த்திருந்தேன்.
நாளும் வந்தது.எனது க்ளாஸுக்கான விடைத்தாள் திருத்தும் பணி இருப்பதால் புகைப்பட ஆல்பமுடன் சென்றேன். எல்லா மிஸ்ஸுக்கும் காண்பித்தாயிற்று பி.டியிடமும் காண்பித்து ஒவ்வோன்றாக ரசிக்கும் அழகையும் பார்த்தாயிற்று ஆனால் சுகன்யாவை மட்டும் காணவில்லை. சரி இன்று முடியாவிட்டால் வீட்டிலேயே உட்கார்ந்து திருத்திக்கொண்டிருப்பாள் போலிருக்கிறதென்னி வீட்டிற்கு வந்தவுடன் அவளின் கைபேசிக்கு தொடர்பு கொள்ள முயன்றேன். யாரும் எடுக்கவில்லை. உடல் நிலை சரியில்லையோ என எண்ணி மீண்டும் அடித்து பின் அதற்கும் பதிலில்லாததால் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவிட்டுவிட்டென்.

அடுத்த நாள் அரக்க பரக்க சுகன்யாவே ஓடிவந்தாள் என் வீட்டிற்கு. அழுது கொண்டே நின்றாள். என்ன ஏதேன்றே தெரியாமல் குழம்பி போயிருக்கும் நேரத்தில் அவளது அப்பாவும் இவளை தேடிக்கொண்டு வந்திருக்க, விஷயம் ஒரளவிற்கு புரிய ஆரம்பித்தது. இவளுக்கு அவசர கல்யாணம் செய்ய முடிவெடுத்ததும் மண்டபத்திலிருந்து போவதறியாது என்னிடம் வந்துவிட்டாள். நடந்த விஷயங்களை அவள் கூறும் முன் அவள் அப்பாவே கூற ஆரம்பித்தார்.

நான் உல்லாச பயணம் சென்ற அன்று இவள் தனது காதலை சொல்ல சென்றாளாம் காதலனிடம். அதை அவர் ஒத்துக்கொள்ளாததால் தற்கொலை செய்து கொள்ள போய் பக்க்த்துவீட்டு அக்காவால் காப்பற்றப்பட்டு வீட்டிற்கு அந்த விஷயம் தெரியவர அவர்களும் இவளுக்கு வேறு வரன் தேடி சொந்தத்திலேயே மாப்பிள்ளையை முடியும் செய்துவிட்டனர். இன்று திருமண நாள். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவளது அப்பாவிடம் நானும் சேர்ந்து கெஞ்ச ஆரம்பித்தேன் அவளது விருப்பபடியே மணவாழ்க்கையை அமைத்துதர. ஆனால் பிடிவாதமாக மறுத்தார். இவளும் இந்த கல்யாணம் வேண்டாம் என்னால் அவரை சமாதானம் செய்து திருமணம் செய்ய இயலுமென பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தாள்.

தொடரும்.....

Monday, April 2, 2012

தோழி

சிறிய கட்டிடம் வீடுகளுக்கு நடுவே, பள்ளி என முகப்பில் பெயர் பலகை வைத்திருந்ததால் அடயாளம் சட்டென தெரிந்தது. மறுநாள் அங்கு தயக்கத்துடன் உள்ளே சென்றேன். இருவர் சிறியவயதே இருக்கும் நாற்காலியில் அமர்ந்திருந்தனர்.

“சார், புதுசா பள்ளி ஆரம்பிச்சிருக்கீங்க போலருக்கு. நான் இளநிலை ஆங்கிலம் செய்யறேன். ஹிந்தியும் படித்திருக்கிறேன். உங்க ஸ்கூலில் டீச்சர் வேலை காலியா இருக்கா?” என்றேன்.
இருவரில் சிறிது குள்ளமாக இருந்தவர் பேசினார். சரிங்க மேடம், உங்க பயோடேடா கொண்டு வந்திருக்கீங்களா.?” என்றவுடன் நீட்டினேன். சரி நாளை உங்களுக்கு கால் செய்கிறோம். என்றார்.
சந்தோஷத்துடன் வீடு திரும்பினேன். அடுத்த நாள் அழைப்பு வரவே எனது சர்ட்டிஃபிகேட்டுடன் சென்றேன். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு ”இது மே மாதம், நீங்க ஜூன் நான்காம் தேதி ஜாய்ன் பண்ணறீங்களா? என கேட்டனர். உடனே ஒப்புக்கொண்டேன். 3ஆம் வகுப்பு ஆசிரியராக நியமனமானேன். மாதம் 4000/- சம்பளம் முதல் சம்பள பணம் நிர்ணயிக்கப்பட்டது. மிக்க சந்தோஷத்துடன் வீடு வந்து சேர்ந்தேன்.

நாட்கள் நகர்ந்தன மெதுவாக ஆனாலும் எனது பரிட்சைகளுக்கு பங்கம் வராமல் மே மாதமே முடிந்து ஜூன் மாதம் தான் ஆசிரியர் பணிக்கு செல்வதால் மிக வசதியான உத்தியோகமாகபட்டது பல விதத்தில். ஜூன் 4ம் தேதி பரபரப்பாக இருந்தது பள்ளி. நான் சென்றது அந்த உயரமான சார் என்னை பார்த்து வாங்க வாங்க என்றார். உடனே அந்த குள்ளமான சார் வாங்க டீச்சர் உள்ள போய் ப்ரேயர் ஆரம்பிக்க போகுது போய் பசங்கள பாருங்க என உரிமையுடன் முதல் பணியை இட்டார்.

ப்ரேயர் செய்யும் இடமும் ஒரு 100 பேர் நிற்கும் இடமாக கச்சிதமாக இருந்தது. நிறைய பிள்ளைகளுடன் அவரவர் பெற்றோரும் நின்று கொண்டு அழும் பிள்ளைகளை சமாதம் செய்து கொண்டிருந்தனர். அதில் ஒருத்தி சுடிதாரில் மாநிறமாக ஒர் குழந்தையை சமாதனப்படுத்த முயற்சித்து தோற்றுக்கொண்டிருந்தாள். யாராக இருக்கும் என யோசித்து பின் சித்தி அத்தை உறவாக இருக்கும் என விட்டு சென்றேன் அவளையும் அவள் நினைவையும்.

ப்ரேயர் முடியவும் ஒவ்வொரு பெற்றோராக அழும் குழந்தைக்கு டாடா காட்டிவிட்டு மறைந்தனர். எனகான க்ளாஸ் ரூம் எது என கேட்க மாடியில் உள்ளது என உயர ஆசாமி சார் ரூமிக்கே உடன் வந்து விட்டுசென்றார். எல்லா பசங்களும் வரிசையில் மேலேயேறி வர, எனது மூன்றாம் வகுப்பு மாணாக்கர்களும் அவர்தம் இருக்கையில் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டனர்.
ஒர் மதில் சுவர் போல் தடுப்பு மட்டுமே உள்ள பக்கத்து க்ளாஸ் ரூமிலிருந்து ஒர் இளம்பெண் மாணவர்களை சத்தம் போடமல் இருக்கச் சொல்லி இரச்சும் குரல் கேட்க எனக்கு ஆர்வம் மேலிட்டது யாராக இருக்கும் ஃப்ரண்ட் ஆகிக்கலாம் என எண்ணி எட்டி பார்த்தேன். எனக்கு ஆச்சர்யமாக போய்விட்டது அந்த சுடிதார் பெண். ஆ..இவளா? இவ டீச்சரா? இப்படி இருந்தா எப்படி பசங்க பயப்படும் மரியாதை கொடுக்கும் என எண்ணினேன். அதற்கேற்றார் போல் அங்குள்ள பிள்ளைகள் ஒவ்வொருவராக அக்கா எனக்கு தண்ணி வேணும், அக்கா எனக்கு பாத்ரூம் போகனும் என கேட்க கடுப்பாகி போனாள் அவள். நானோ சிரித்துவிட்டேன் என் சிரிபொலி கேட்டவுடன் யாரது என்பது போல் என் பக்கம் திரும்பிப்பார்த்தாள்.

தொடரும்....

Wednesday, March 21, 2012

உரிமை-6

வளர்பிறை நாள்
எதையும் ஆரம்பிக்க
உகந்த நாளாம்.
சூரிய நிழலின் மேல் நம்பிக்கை
பூலோகத்தில்.
நிழலாடியது நிஜத்தை திருடிக்கொண்டு.

Thursday, March 8, 2012

இறப்பு




பிரிவு என்பது
நிலையாதிருப்பதன் மெளன மொழி.

நாம் கேட்கும் சக்தியிழந்த பின்
கிடைக்கும் பெரும் சப்தம்.

காலம் கடந்த காட்டு வழி ஞானம்.

நேசிப்பவரின் இறுதி சுவாசிப்பு.

நிலம் நீங்கி நிலத்தில் புதைத்தாலும்
உரிமை இழந்து உறவாடும் சவப்பெட்டி.

அவ்வழி சென்றோரின் வரிசையில் நாம்
தொலைந்து போனதை தேடிக்கொண்டு.

Tuesday, March 6, 2012

உரிமை 5

நெருங்கி அமர்ந்தன கிளிகள்
கூடோடு போயின
மரத்தின் வெட்டப்பட்ட கிளை
வீட்டு அலங்கார பொருளாக.